Sunday, 23 October 2011

ஹசாரேவிடம் ஒரு மாணவனின் கேள்விகள்...


மாணவன் : குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் லோக்பால் மசோதா கொண்டுவரவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்துள்ளது. அது உண்மைதானா?

அன்னா : ஆம் உண்மையே.

மாணவன் : அப்படியானால் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட் டால், காங்கிரசுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வீர்களா?

அன்னா : நான் அப்படிச் சொல்ல வில்லையே.

மாணவன் : வேறு யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?

அன்னா : அதையும் நான் சொல்லவே யில்லையே.

மாணவன் : லோக்பால் மசோதா குளிர்கால தொடருக்குள் கொண்டுவரவில்லை என் றால் அப்போது யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?

அன்னா: அதையும் நான் சொல்லவில்லை.

மாணவன் : இப்போது சொல்லவில்லை, அப்படியானால் எப்போது சொல்வீர்கள்?

அன்னா : உங்கள் வாதம் குழப்பமாக உள்ளது. இந்தக் கேள்வி இப்போது வேண்டாம்.

மாணவன் : நீங்கள் இப்போது சொல்ல வில்லை என்றாலும், காங்கிரசுக்கு அடுத்த பலமான கட்சியான பிஜேபிக்கு வாக்களியுங் கள் என்று கேட்பதாகாதா? அப்படி நினைக் கலாமா?

அன்னா : அது உங்கள் “யூகம்”?

மாணவன் : நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பெரிய பெரிய சாமியார்கள், உலகில் பல இடங்களில் கிளைகள் வைத் துள்ள கோடீஸ்வர சாமியார் களெல்லாம் வந்து உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்தார்களே, அதன் பொருள் என்ன?

அன்னா : நியாயத்திற்கு, தர்மத்திற்கு யார் ஆதரவு கொடுத்தால் என்ன? அவர் களாக வந்து ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை.

மாணவன் : அப்படியானால் கர்நாடக மாநில பிஜேபி கட்சி ஊழல் நடத்தியது ஊர் அறிந்த விஷயம். அதை எதிர்த்து நீங்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினால் அந்த சாமி யார்கள் வலிய வந்து உங்களுக்கு ஆதரவு தருவார்களா? அதுவும் உங்கள் வாக்குப்படி தர்மத்துக்கும் நியாயத்திற்கான போராட்ட மாகத்தானே இருக்கும்.

அன்னா : இது குதர்க்கமான கேள்வி. உள்நோக்கமான கேள்வி.

மாணவன் : அந்த சாமியார்களோடு நெருங்கி உறவு கொண்டுள்ள அத்வானி இப் போது மத்திய அரசின் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருகிறாரே. உங்களை ஆதரித்த

அந்த சாமியார்களோடு உறவு வைத்துள்ள அத்வானி இப்போது நடத்தும் ரதயாத்திரை,

உங்களின் போராட்டம்- இவற்றுக்கெல்லாம் இடையில் ஏதோ ஓர் இழை ஓடுவதாகத் தெரிகிறதே, உங்கள் கருத்து என்ன?

அன்னா : இது உங்கள் கற்பனை, மாணவராகிய நீங்கள் அதிகம் சினிமா பார்ப்பதுண்டா? உங்கள் கற்பனை சினிமா கற்பனை!

மாணவன் : இது கற்பனை அல்ல, சூழ் நிலை, சாட்சிகள், காட்சிகள் அப்படித்தான் சொல்லுகின்றன. அது சரி, நீங்கள் காந்திய வாதி. அத்வானி 1992ஆம் ஆண்டு இப்படி ஒரு ரதயாத்திரை நடத்தி இந்து, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி உயிர்விட் டார்கள். அதாவது மதக்கலவரத்தில் முடிந் தது, அதே வேகத்தில் பாப்ரி மசூதி இடிக்கப் பட்டது. அதே வேகத்தில் மத்திய ஆட்சி யைப் பிடித்தது. இவையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். காந்தியவாதியான நீங்கள் அதை ஆதரித்தீர்களா?

அன்னா : நான் அதை ஆதரித்தேன் என்று யார் சொன்னது?

மாணவன் : அப்படியானால் அதை எதிர்த்தீர் களா?

அன்னா : (மௌனம்)

மாணவன் : அதை எதிர்க்கவில்லை யென்றால் காந்திக்கு செய்யும் துரோக மல்லவா? நான் மாணவன். தாங்கள் எதிர்த்த தாக செய்தி ஏதும் நான் படிக்கவில்லை.

அன்னா : நீ மாணவன் இன்னும் நீ அதிகம் கற்கவேண்டும். சில விஷயங் களில் சும்மா இருப்பதே சுகம் என்பதை அறிய உனக்கு இன்னும் காலம் தேவைப் படுகிறது.

மாணவன் : மதக்கலவரத்தை எந்தக் காலத் திலும் காந்தி ஆதரித்ததில்லை. இப்போது அத்வானி ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த சக்திகள் ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் வெளிவந்தன. கர்நாடகா விலும் இப்போது சந்தி சிரிக்கிறது. இந்த யோக்கிய சிகாமணிகள் தான் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வரப்போகிறார்களாமே? ரத்த யாத்திரை நடத்தப்போகிறார்களாமே? இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அன்னா : (மௌனம்)

மாணவன் : அல்லது எதிர்க்கிறீர்களா?

அன்னா : அன்று அத்வானி நடத்திய தேர் ஓட்டம் வேறு, இன்று அவர் வேறு பிரச் சனைக்காக தேர் ஓட்டுவதாக நீங்கள் படிக்கவில்லையா?

மாணவன் : படித்தேன். இரண்டு தேர் ஓட்டமும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் தான். பிரச்சனை வேறு வேறாக இருக்கலாம். அன்று காந்தி போற்றிய ராமனை இந்தக் கூட்டம் தங்களுக்குச் சாதகமாக தேர் ஓட்டி வேறு வடிவத்தில் பயன்படுத்திக்கொண்டது. இன்று காந்தியவாதி என்று சொல்லும் உங்களை, எந்த ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லி களம் கண்டீரோ, அந்தக் களத்தை, அதே களத்தைப் பயன்படுத்திக்கொண்டு ரதயாத்திரை என்று சொல்லி ஒரு மதவாத அரசியல்கட்சி ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது. இது உங்களுக்குப் புரிய வில் லையா தாத்தா? நான் சிறியவன், அரசியல் நிறையப் படிக்காதவன். இது எனக்குப் புரிகிற போது, உங்களுக்கு எப்படிப் புரியாது போகும். சொல்லுங்கள்!

அன்னா : (அமைதி)...

மாணவன் : ஏன் அமைதியாக இருக் கிறீர்கள்? மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி யல்லவா? காந்தியைக் கொன்ற அதே கூட்டம் இப்போது காந்தியவாதி என்று சொல்லும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நீங்கள் எதை சிவில் சொசைட்டி என்று கூறுகிறீர்கள். ராமர் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்ட நாதுராம் கோட்சே, கோர்ட்டில் வாக்குமூலம் தந்தபோது, பகவத் கீதையைப் படித்த பிறகுதான் காந்தியைக் கொல்ல தைரியம் வந்தது, கொல்லவும் முடிவெடுத்தேன் என்று சொன்னது உங்களுக்குத் தெரியாதா?

அன்னா : பொடியனே! அதையெல்லாம் நீ ஏன் இப்போது பேசுகிறீர் இந்த இடத்தில் அது அவசியமில்லை.

மாணவன் : நீங்கள் காந்தியவாதியல்லவா? அத்வானி லஞ்சத்தை எதிர்த்து, ஊழலை எதிர்த்து தேர் ஓட்டம் வருவது தேவையில் லாத ஒன்று, அது ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் நோக்கம் கொண்டது. அதை நான் ஆதரிக்கவில்லையென்று சொல்ல நீங்கள் தயாரா?

அன்னா : மௌனம்...?

மாணவன் : ஏன் தயங்குகிறீர்கள்? வாழை மரம் முள்ளில் உராய்ந்தாலும், முள் வாழை மரத்தில் உராய்ந்தாலும் சேதாரம் வாழை மரத்துக்குத் தான். நீங்களே அவர்களோடு உராய்ந்தாலும், அவர்களே உங்களோடு உராய்ந்தாலும் சேதாரம் உங்களுக்குத்தான். தைரியமாக அத்வானி சூழ்ச்சியை எதிர்த்து அறிக்கை விடுங்கள்.

அன்னா : (அமைதி)....

மாணவன் : ஏன் அமைதி, ஏன் தயக்கம்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். பங்கு பெற்று செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்கனவே அன்னாவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள் என்று வெளிப்படையாக பூனாவில் நடை பெற்ற தசரா விழாவில் பேசியிருக்கிறாரே? உங்கள் பதில் என்ன?

அன்னா : இதை நான் வன்மையாக மறுக்கிறேன். என்னை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரும் சந்திக்கவில்லை.

மாணவன்: வாஜ்பாய் அரசு மத்தியில் ஆண்டபோது அந்த ஆட்சி பல ஊழல்களில் சிக்கித் தவித்ததே! உதாரணமாக டெலிகாம் ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல், யூடிஐ மோசடி, கேத்தன் பரேக் ஸ்டாக் மார்க்கெட் மோசடி, தெஹல்கா பத்திரிகை வெளியிட்ட ராணுவத்துறைக்கான ஆயுதம் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி ஊழல், மகாபெட்ரோல் மோசடி, நில ஊழல் - இப்படி துர்நாற்றம் வீசியதே, இவைகளெல்லாம் தங்களுக்குத் தெரியுமா? அப்பொழுதெல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருந்தீரா? உள் நாட்டில் இருந்தீரா? இந்த யோக்கியர்கள் இப்போது ஆட்டுத் தோல் போர்த்திய நரியாய் ரதயாத்திரை வருகிறார்களே, அதிலும் மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து பவனி வரப் போகிறார்களே. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

அன்னா : அது அந்தக்கட்சி எடுத்த முடிவு.

மாணவன் : அதன் உள்நோக்கமென்ன? ஊழல் ஒழிய வேண்டுமென்ற எண்ண மில்லை. நீங்கள் போராடி, உண்ணாவிரதம் இருந்து ஒரு பகுதி மக்களைத் திரட்டினீர்களே. அதிலும் சில அறிவு ஜீவிகளையும், மத்தியதர வர்க்கத்தையும் திரட்டினீர்களே. அதில் ஆதாயம் தேடி அரசியல் லாபம் சம்பாதிக்கும் பச்சையான மோசடி என்று எனக்கு, சிறுவனாகிய எனக்குப் புரிகிறது? உங்களுக்குப் புரியவில்லையா?

அன்னா : (மௌனம்)...

மாணவன் : ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்னைப் போன்ற கோடானு கோடி மாணவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது என நான் கவலையோடு தெரிவிக்கிறேன். என் மீது நீங்கள் வருத்தப்படக்கூடாது.

அன்னா : நீங்கள் பேசுவது ஒரு மாணவனிடமிருந்து வரும் வாதமாகத் தெரிய வில்லை. ஓர் அரசியல்வாதி உள் நோக்கத்தோடு பேசுவதுபோல் இருக்கிறது.

மாணவன் : இப்படி நீங்கள் பேசுவது உங்களின் போக்கை மறைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு மலிவான வாதம், அவ்வளவே.! இது ரத யாத்திரையா அல்லது ரத்த யாத்திரையா? ரதயாத்திரை ஊழலை ஒழித்திடுமா? மாறாக மத ஆத்திரத்தை மூட்டவே செய்யும். ரத்தம் சிந்தச் செய்யும். சிந்தியுங்கள். வருகிறேன்...
கற்பனை : தே.இலட்சுமணன்
(நன்றி தீக்கதிர்)

Mohamed rafeek

Friday, 21 October 2011

சங்கத்திற்கு சம்மட்டி அடியா ???


   நிச்சயமாக விசுவாசிகள் யாவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தை)யும் நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹவுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். (அல்குர்ஆன் 49:10)

அன்பிற்குரிய அதிரை மக்களே

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லும் இந்த நாட்டில் வாக்கு கொடுத்தவனின் வாக்கை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று சொல்லுவது இல்லை, வேட்பாளர்களுக்கு வக்காளத்து கேட்டு வரும் எவரும் நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என்று கேட்பதும் இல்லை இது போன்ற சூழ்நிலையில்  தமிழகம் சந்தித்த உள்ளாச்சி தேர்தலில் இதற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் அதிரை மக்களின் கொந்தளிப்பின் காரணமாக அந்த மக்களால் நடத்தப்படும் சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களின் ஆதரவுடன் வேட்பாளர்களை தாமே நிறுத்துவது என்றும் தவறுகள் செய்தால் தட்டி கேட்போம் அல்லது பதவியை விட்டு விலகசொல்வோம் என்றல்லாம் சொல்லி வேட்பாளர்களை நிறுத்தியது, அரசியல் கட்சிகளே அடி போகும் அளவுக்கு பெருபான்மையான மக்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் , அதில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்

குறிப்பாக என்னுடன் சேர்ந்து சில சகோதர்கள் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும் முறையை தவறு என்று பல முறை இணையத்தில் எடுத்து வைக்கபட்டது, பொதுவாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அவர்களுடன் நேர்காணல் வைத்து வெற்றி வாய்ப்பினை அடிப்படையாக வைத்து தேர்ந்து  எடுக்கபடுவார்கள், ஆனால் எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் சங்க தேர்வாளர்கள் வேட்பாளர்களை எதோ சங்க பதவிக்கு தேர்ந்து எடுப்பது போல் குழுக்கள் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள் முடிவில் பெருபான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்தித்தனர் குறிப்பாக வெற்றி வேட்பாளர்கள் சங்கத்தை தேடி வந்தும் தேர்ந்து எடுக்கும் முறையை காட்டி வாய்புகள் மறுக்கப்பட்டதில் பலர் வேதனை அடைந்தனர்

ஹைர் முடிவில் தேர்ந்து எடுக்க பட்ட அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே ஆனால் அவர்கள் எல்லோரும் சங்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும் (இன்ஷா அல்லாஹ் )....,

சங்கத்திற்காக மக்களா அல்லது மக்களுக்காக சங்கமா என்று கேள்வி எழுந்தால் நிச்சயம் மக்களுக்காக சங்கம் என்பதைத்தான் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்பதற்கு இணங்க இனி வரும் காலங்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை சங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையுடன்

சங்கத்தின் வெற்றி அச்சங்கத்தின் அங்கத்தினரின் வெற்றி
சங்கத்தின் தோல்வி அச்சங்கத்தின் அங்கத்தினரின் தோல்வி

ஆக சங்கம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொல்லுபவர்கள் தங்களை தானே இழிவுபடுத்தி கொள்பவர்கள் என்று சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்

குறிப்பு :

மனிதர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வெறுப்புக்குள்ளான இதயங்களுக்கிடையில் பிரியத்தை ஏற்படுத்தவும் மிகைப்படுத்திப் பேசுவது பொய்யாக கருதப்படாது, பேசுபவரும் பொய்யராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Mohamed Rafeek Taj